கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்தை முந்த முயன்ற தனியார் நகரப் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானதால் அங்கு பரபரப்பு நிலவியது.
கோவை பேருந்து நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அலுவலக வேலை முதல் கூலி வேலை வரை கோவைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ‘ உரிய நேரத்தில் வாகனங்களை இயக்காமலும், பயணிகளை ஏற்றுவதில் போட்டியும், உரிமையாளர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையே மோதல் சம்பவங்களும் நிலவி வருகிறது’.
இந்த நிலையில் சில அரசு பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று தனியார் பேருந்துகளுக்கு பயணிகளை ஏற்றுவதற்கு உதவுவதும், சரியான நேரத்தில் பேருந்தை இயக்காமல் இருப்பதும், மற்றும் சரியான நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் செல்வது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து வீரபாண்டி பிரிவு அருகே கோவை நோக்கி வந்த அரசு பேருந்தை முந்துவதற்காக அதிவேகமாக தாறுமாறாக வந்த தாமரை என்ற தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி ஏறி நின்றது. அதில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதனை வீடியோவாக பதிவு செய்து உள்ள வாலிபர்கள் “ஐயோ அங்க பாரு அவன் வண்டியை எப்படி ஏத்திருக்கான்னு ” என்று அவர்கள் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த வியாபாரப் போட்டியினை தடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் தான் ‘ பயணிகளின் பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக உள்ளது .

