கோவை: அன்னூரில் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட அச்சம்பாளையம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதே பகுதியில் தனியார் உணவு நிறுவன தொழிற்சாலை, உட்பட சில தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை, ரசாயனம் கலந்த கழிவுத் துகள்கள் உள்ளிட்டவற்றால் அப்பகுதியில் துர்நாற்றம் அதிகளவு வீசுவதாகவும் மக்கள் பலருக்கும் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும்
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு தங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த நச்சுப் புகை, இரும்பு கலந்த நுண்கழிவுகள் வீடுகளிலும் உணவுகளிலும் படிந்து கொள்வதாகவும், இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் ,இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த தேர்தலை புறக்கணித்து அரசு அளித்த அடையாள அட்டைகளை திருப்பி தர முடிவெடுத்துள்ளதாக கூறினர்.

