கோவை: ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழு இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி, நள்ளிரவில் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை – பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி பகுதியில் இயங்கி வரும் கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரவு உணவில் புழு மற்றும் பூச்சிகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், உடனடியாக விடுதி காப்பாளர் மற்றும் உணவக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தங்களது புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய மாணவர்கள், விடுதி வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தரமான மற்றும் சுகாதாரமான உணவை வழங்க வேண்டும்”, “மாணவர்களின் உடல்நலனுடன் அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடாது” என முழக்கங்களை எழுப்பினர். இதனால் நள்ளிரவில் விடுதி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
தகவலறிந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் முன்வைத்த குறைகளை உடனடியாக பரிசீலித்து, உணவின் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இருப்பினும், விடுதி உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதார நிலை குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, குறைபாடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
VIDEO
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மாணவர்கள் உணவின் தரம் குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.





