Breaking News: கோவை அருகே பெண் தர மறுத்ததால் வீடு புகுந்து காதலி மற்றும் அவரது பாட்டியை படுகொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபதி. இருசக்கர வாகன ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கலையரசி. இவர்களது மகள்கள் ஹரிதா வயது 18 மற்றும் கவுசி வயது 16. இவர்களுடன் பூபதியின் தாய் மயிலாத்தாள் என்பவரும் வசித்து வந்தார்.
கவுசி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். ஹரிதா கிணத்துக்கடவு அருகே தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நெகமம் கப்பளாங்கரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும், கவுசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களின் காதல் விவகாரம் பூபதிக்கு தெரிய வந்தது. எனவே அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு இடையே அபிஷேக் தனது பெற்றோருடன் சேர்ந்து கவுசியை திருமணம் செய்து கொள்ள அவரது குடும்பத்தினரை அணுகியதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு மறுப்பு
இருப்பினும் திருமணத்திற்காக சட்டப்பூர்வ வயதை கவுசி எட்டவில்லை, என்பதால் திருமணம் செய்து கொடுக்க பெண்வீட்டார் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 7.15 மணி அளவில் கவுசியின் வீட்டிற்கு அபிஷேக் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தினார்.
இதற்கு கவுசி மறுப்பு தெரிவித்தால், ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கவுசியை சரமாரியாக குத்தினார். இதில் அலறியபடியே அவர் கீழே விழுந்தார். அப்பொழுது அங்கு தடுக்க வந்த பாட்டி மயிலாத்தாள், கவுசியின் அக்காள் ஹரிதா ஆகியோரையும் கத்தியால் அபிஷேக் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் கத்திக் குத்தில் காயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரட்டைக் கொலை
இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மயிலாத்தாள், கவுசி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அபிஷேக் நெகமம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் 16 வயது சிறுமி கவுசி மற்றும் அவரது பாட்டி மயிலாத்தாள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தை உலுக்கியுள்ளது.

