கோவை: போத்தனூரில் ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள லாட்டரிகளை சிலர் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று போலீசார் சலாபி நகர் கருப்பராயன் கோயில் 2வது வீதியில் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்தில் அங்கிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களது செல்போனை சோதனை செய்தபோது அவர்கள் ஆன்லைன் மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகளை கோவையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் லாட்டரி சீட்டு விற்ற போத்தனூர் சலாபி நகரை சேர்ந்த சாகுபர் சாதிக் (44), கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த லத்தீப்(46) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2,46,700 மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

