கோவை: RTO அபராதம் என ஏமாற்றிய கும்பலுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களுக்கு எதிராகக் கோவை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ப்இந்நிலையில் முதியவரிடம் ரூ.16.5 லட்சம் மோசடி செய்த குஜராத்தைச் சேர்ந்த 10 சைபர் குற்றவாளிகளுக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்ப அளித்து உள்ளது. வழக்கு பதியப்பட்ட வெறும் 46 நாட்களில் இந்தத் தண்டனை பெற்றுத் தரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் (71) என்ற முதியவரின் வாட்ஸ் அப்பிற்கு கடந்த 08.09.2025 அன்று ‘RTO Challan’ அபராதம் செலுத்துவது போன்ற ஒரு தகவல் வந்து உள்ளது. அதை உண்மை என நம்பி அவர் அனுப்பப்பட்ட .apk செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளார். அடுத்த கணமே அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டது.
அடுத்த நாள் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 12 தவணைகளாக மொத்தம் ரூ.16,49,961/- கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட முதியவர் சாமுவேல் சந்திரபோஸ் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் துணை ஆணையர் திவ்யா வழிகாட்டுதலின் படி, ஆய்வாளர் K.அழகுராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை குஜராத் மாநிலம் சூரத் பகுதிக்குச் சென்றது.
அங்கு பதுங்கி இருந்த பத்லியா ரஜ்னி பாய், தல்ஷி பாய் உட்பட 10 பேரை கைது செய்து கோவைக்குக் கொண்டு வந்தனர்.
அவர்களிடம் இருந்து 311 டெபிட் கார்டுகள், POS இயந்திரம் மற்றும் பணம் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 16 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கையைத் (Charge Sheet) தாக்கல் செய்தது.
அடுத்த 30 நாட்களில் சாட்சிகளை ஆஜர்படுத்தி விசாரணையை முடித்தது.
கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (JM IV), குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.3 லட்சம் அபராதமும் (மொத்தம் ரூ.30 லட்சம்) விதித்துத் தீர்ப்பு அளித்தது.
துரிதமாகச் செயல்பட்ட சைபர் கிரைம் குழுவினரை மாநகர காவல் ஆணையர் கண்ணன் பாராட்டினார்.
முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் .apk ஃபைல்களை (Applications) ஒருபோதும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அது உங்கள் வங்கி கணக்கை காலி செய்துவிடும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

