கோவை: கோவையில் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை உணவு திருவிழா நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் தரமான, சத்தான, ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பிரசித்திப் பெற்ற உணவு வகைகளை அந்தந்த மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து விற்பனை செய்திடும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 04.03.2026 முதல் 08.03.2026 ஆம் தேதி வரை வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.
உணவுத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவு வகைகள், தனித்துவமான அசைவ உணவு வகைகள் சமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதில் முக்கிய அம்சமாக கோவை கொங்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கோவை அரிசி பருப்பு சாதம், விருதுநகர் பன் பரோட்டா, திருநெல்வேலி அல்வா, சேலம் தட்டுவடை செட்டு, நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், நாமக்கல் வாத்து முட்டை மசாலா, நீலகிரி ராகி களி, சிக்கன் குழம்பு மற்றும் தேநீர் வகைகள், கரூர் முருங்கை சூப் வகைகள்,
கிருஷ்ணகிரி ராகி களி, கருவாட்டு குழம்பு, நாகப்பட்டினம் மீன் வறுவல், இரால் வடை, நண்டு சூப், மீன் போண்டா, ஈரோடு காளான் பிரியாணி, ஐஸ்கிரீம், கேக் வகைகள், சாக்லேட், பாதாம், ரோஸ்மில்க் திருப்பூர் சிறுதானிய உணவுகள் மற்றும் இதர அறுசுவை உணவு வகைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 20 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும் Ready to Eat உணவு வகைகளான நிலக்கடலை பர்ஃபி ஹெல்த் மிக்ஸ், சிறுதானிய உணவுகள், உலர் பழங்கள், வர்க்கி. பிஸ்கட், வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட், தட்டு வடை 90 கிட்ஸ் தின்பண்ட வகைகள். தினை தின்பண்டங்கள் உள்ளிட்ட ஆயத்த உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI) பெற்ற குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையில் தயாரித்து, தகுந்த முறையில் Packaging செய்து விற்பனை செய்திட 20 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
04.03.2026 ஆம் தேதி முதல் 08.03.2026 ஆம் தேதி வரை வஉசி மைதானத்தில் நாள்தோறும் மதியம் 1.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம் இத்தகைய சிறப்புமிக்க உணவுத் திருவிழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் சுவையும் தரமும் நிறைந்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

