கோவை: கோவை சூலூர் பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் முன்கூட்டியே வரி செலுத்த அழுத்தம் கொடுக்கிறதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டத்தின் சூலூர் தாலுகாவிற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல சிறு , குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, தற்போது இந்த நிறுவனங்கள் வரி வசூல் தொடர்பாக தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை ஆண்டுதோறும் காலக்கெடுவுக்குள் செலுத்தி வரும் நிலையில், இந்த சூலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சில இடங்களில் முன்கூட்டியே தொகை செலுத்துமாறு வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலுவை இருப்பதாக தெரிவித்து உடனடி கட்டணம் கோரப்படுவதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சில பகுதிகளில், கட்டணம் செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும், வணிக சூழ்நிலை சீர்குலைவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் காலம் நெருங்கும் நிலையில் வருவாய் சேகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிலர் கருதினாலும், நிர்ணயிக்கப்பட்ட அவகாசம் இருக்கும் போது கூடுதல் அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வரி வசூல் செயல்முறைகள் வெளிப்படையாகவும், விதிமுறைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தேவையற்ற நிர்பந்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



