கோவை: சாலையோரம் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானையை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்தனர்.
கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், பன்னிமடை, உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது.
கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துகிறது. நேற்று கணுவாய் பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்றை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்திச் சென்றது.
இந்நிலையில் கணுவாய் அடுத்த தடாகம் சாலை குன்று பெருமாள் கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒற்றைக் காட்டு யானை சுற்றி திரிந்து அங்குள்ள மரங்களை தின்று கொண்டிருந்துள்ளது.
சாலையை ஒட்டியே மலைத்தொடர் இருப்பதாலும் ஒற்றைக் காட்டு யானை அடிவாரத்தில் இருந்ததாலும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானையை கண்டு ரசித்தனர். சிலர் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
அப்பொழுது அப்பகுதியில் வசிக்கும் சில மக்கள் இது போன்று பார்ப்பது ஆபத்தானது என்று கூறி அங்கிருந்து சில வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தற்பொழுது வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை அடிவாரத்தில் இருந்து மேலே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டு யானைகளை அடர்வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

