கோவை: காணாமல் போய் 23 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப்பில் தன் மகனை மீட்ட தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி – சுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு பிரகாஷ், பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி கோவைக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். இரு மகன்களுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
அந்நிலையில், 2003-ஆம் ஆண்டு மூத்த மகன் பிரகாஷ் வீட்டில் திடீரென காணாமல் போயுள்ளார். அப்பொழுது அவருக்கு வயது 16 என கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் தேடிவந்துள்ளனர். சில மாதங்கள் கழித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரகாஷ் தான் சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விவரம் தெரிந்த வயது என்பதால் அவர் வந்து விடுவார் என்று நம்பி இவர்கள் இருந்துள்ளனர். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் அவர் வரவில்லை பல்வேறு இடங்களில் தேடியும் பிரகாஷ் கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ராமமூர்த்தி கேன்சரால் உயிரிழந்துவிட்டார்
சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாகப் பணியாற்றி வந்ததும், சண்டிகரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் மூலம் அவர் சமீபத்தில் மீட்கப்பட்டு அந்த நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததும் சுந்தரிக்கு தெரியவந்தது.
மகனைத் திரும்ப அனுப்ப முறையான அரசு ஆவணங்கள் தேவைப்பட்டதால், சுந்தரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் பிரகாஷ் கோவையில் 3-ஆம் வகுப்பு வரை படித்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரது பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அரசு ஆவணங்களுடன் பஞ்சாப் சென்று சுந்தரியிடம், அங்குள்ள அதிகாரிகள் சான்றிதழ்களைச் சரிபார்த்து பிரகாஷை ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட மகனுடன் தாய் சுந்தரி தற்போது கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். 23 ஆண்டுகளாக பிரார்த்தனைக்கும் தற்போது பலன் கிடைத்து விட்டது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் மகனை என்னுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் உறுதுணையாக இருந்த சமூக ஆர்வலர் முத்தையா ஆகியோருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டுள்ளார்.





