கோவை: சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழி கருப்பு மைக் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந்தி மொழி திணிப்பிற்கு பல்வேறு திராவிட கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் ஊரின் பெயர் இந்தி மொழியில் இருப்பதை கண்டித்து அதனை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இந்தி மொழிக்கு முக்கியத்துவத்தை மத்திய அரசு தருவதாகவும் தமிழ் மொழியை புறக்கணிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே ரயில் நிலையங்கள் முன்பு திராவிட கட்சியினரும், மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்களும் இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் ஊர் பெயர் அறிவிப்பு பலகையில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த சிங்காநல்லூர் என்ற வார்த்தை கருப்பு மை கொண்டு மர்ம நபர்களால் இரவு நேரம் அழிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் மூன்று இடங்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த சிங்காநல்லூர் என்ற ஊரின் பெயர் அழிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே போலிசாரும் சிங்காநல்லூர் காவல் நிலைய போலிசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

