கோவை: கோவையில் குடியிருப்பில் 4 அடி உயர கஞ்சா செடி வளர்ந்துள்ள நிலையில் பீகார் தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வடவள்ளி அருகே உள்ள ஓணம்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read also Coimbatore latest news: கோவையில் தவெக நிர்வாகி மீது வழக்கு!
தொழில் நகரமான கோவையில், பீகார் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். வடவள்ளி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஓணம்பாளையத்தில், சுமார் 40-க்கும் மேற்பட்ட பீகார் மாநிலக் குடும்பங்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு கஞ்சா செடி வளர்க்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, வடவள்ளி காவல் துறையினர் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது, குடியிருப்பின் அருகே சுமார் 4 அடி உயரம் வளர்ந்து இருந்த கஞ்சா செடியைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்தச் செடியைப் பறிமுதல் செய்த போலீசார், அந்தப் பகுதியில் தங்கி இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 40 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ காட்சிகள்
இந்தச் செடியை வளர்த்தது யார்?
வணிக ரீதியாகவோ அல்லது சுய பயன்பாட்டிற்காகவோ இது வளர்க்கப்பட்டதா ?
இந்த குடியிருப்புகளில் வேறு ஏதேனும் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா ? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

