கோவை: கோவையில் பாஜக வேட்பாளர் யார் என விரைவில் தெரியவரும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர் மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக இந்திய மக்கள் பெரிதும் பயனடைவார்கள் எனவும், இந்த நடவடிக்கைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவிவரும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி தேவையில் 70% இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் எரிசக்தி தேவைக்காக வரும் கப்பல்கள் ஹார்மோஸ் நீர்முனை வழியாக வந்த நிலையில், அங்கு உள்ள போர்ச்சூழல் காரணமாக பெருமளவு எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியா மட்டுமின்றி பல நாடுகள் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் எரிசக்தி இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், பிற நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தினாலும், இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை பத்து ரூபாய் குறைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக இந்திய மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
மேலும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் 11 கோடி ஏழைப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு குறைந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவை மட்டுமின்றி எரிசக்தி துறை தன்னிறைவு அடைவதற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகித்து வருவதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு சரியான வகையில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இன்று அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டவர், தொகுதி பங்கீடு விஷயத்தில் கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும், கட்சியினர் உழைத்த தொகுதி கூட்டணி கட்சிக்கு வழங்கப்படுவது வலியை தந்தாலும் கூட்டணி கட்சியின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளிவரும் எனவும், கோவை வடக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது விரைவில் தெரியவரும் எனவும் அவர் பதில் அளித்தார்.

