கோவை: தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் வருகை புரிவதை முன்னிட்டு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 9ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க. மாநில தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிப்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
பிரதமர் மோடி நாளை பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் தேசி ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். குறிப்பாக திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல் மந்திரி கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அவர் ரோடு ஷாவிலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி கோவை வந்து கேரளா செல்வதால் கோவையில் முக்கிய பகுதிகளில் இன்று முதல் நாளை மார்ச் 29 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையார், அவிநாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர் மற்றும் ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை பிற்பகல் 2 மணி அளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார்.

