கோவை: யாசகம் கேட்டப்படி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் கோவையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது.
தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில், வித்தியாசமான பிரச்சார முறைகளால் கவனம் ஈர்த்து வரும் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான நூர் முகமது, சமீபத்தில் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 49வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, சுடுகாட்டிலிருந்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட மண் சட்டியுடன் வந்து, பேரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே சட்டியை உடைத்து தனது மனுவை தாக்கல் செய்தது பெரும் கவனத்தை ஈர்த்தது. “ஓட்டுக்கு பணம் வாங்கினால், இறுதிச்சடங்கு வீட்டிலேயே நடக்கும்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை என அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் 50வது முறையாக போட்டியிடும் அவர், மேலும் ஒரு வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சிறுவண்டியில் கயிறு கட்டி இழுத்து கொண்டு வரப்பட்ட அவர், மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து, பிச்சை பாத்திரம் ஏந்தியபடி வந்து தனது மனுவை தாக்கல் செய்தார்.
“தேர்தல் நேரத்தில் ஓட்டுப்பிச்சை கேட்பவர்கள், வெற்றி பெற்ற பிறகு மக்களை பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள். வாக்காளர்களை மொட்டை அடித்து மிளகாய் அரைப்பார்கள் என்பதைக் காட்டவே இந்த வேடம்,” என அவர் விளக்கம் அளித்தார். மேலும், மக்கள் பணத்திற்கு அடிமையாகாமல், நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி மக்களிடமே உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நூர் முகமது இதற்கு முன்பும் குதிரையில் ‘ராஜா’ வேடம், விவசாயி வேடம், சவப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான முறைகளில் வேட்புமனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
1997ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்த அனுபவமும் அவருக்கு உள்ளது. ஜனாதிபதி முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை இதுவரை 48 முறை போட்டியிட்டுள்ள அவர், விழிப்புணர்வுக்காக மட்டுமே சுமார் 8 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

