கோவை: அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை கணபதியில் உள்ள தனியார் மண்டபத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-
நாட்டிற்கே பாஜக மகளிர் அணி தலைவராக இருந்து நமது மண்ணுக்கு பெருமை சேர்க்கிறார் வானதி சீனிவாசன். கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றி, மக்களிடம் மக்களாக இருந்து பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
நான் மேற்பார்வை செய்யும் 21 தொகுதிகளில், 20 தொகுதிகளில் ஏற்கனவே வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டேன். இன்று 21வது தொகுதியில் வானதி சீனிவாசனை அறிமுகம் செய்கிறேன். தமிழகத்தில் ஜெயலலிதா இருந்தபோது இருந்த பாதுகாப்பை மீண்டும் தருவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம். ரூ.63,000 கோடியை சென்னை மெட்ரோ ரயிலுக்கு ஒதுக்கியவர் பிரதமர். 11 மருத்துவமனைகளை கொடுத்தவர் பிரதமர். கேட்டுவாங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் அனைத்து கட்சிகளும் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும்.
எப்போதெல்லாம் அதிமுக தோற்றதோ, அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடையும். இதுதான் வரலாறு.
உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக வர இருக்கிறது. நாம் அதிலும் வெற்றி பெற வேண்டும். நமக்கு மரியாதையை கொடுத்தது கட்சி. எனவே, கட்சிக்காக இந்த 15 நாட்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும்.
கரூரில் தனது சொந்தக் கட்சிக்காரரையே காப்பாற்றாதவர் விஜய். அவரெல்லாம் கணக்கிலேயே இல்லை.
இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார்.
நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசியதாவது:-

தமிழகத்திற்கு வளர்ச்சி வேண்டுமென்றால், மத்தியிலுள்ள பிரதமருடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும்.
7 ஆண்டுகளுக்கு முன், கோவை இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இருந்தது.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு பலன் கொடுக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களை கோவை தெற்கு தொகுதியில் கொண்டுவந்துள்ளோம். அதனால் மக்கள் பலன் பெறுகிறார்கள்.
10க்கும் மேற்பட்ட திட்டங்களை கோவை தெற்கு தொகுதியில் செயல்படுத்தியுள்ளேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்.
நான் இப்போது எம்.எல்.ஏ. என்பதால், ஒன்றிய அமைச்சர்களுடன் உள்ள நட்பு மூலம் பல்வேறு திட்டங்களை கோவைக்கு கொண்டு வர முடியும்.
இங்கு வெற்றி என்பது உறுதியான விஷயம். நாம் அத்தனை பேரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.

