கோவை: சூப்பர் மார்க்கெட் பங்குதாரராக சேர்ப்பதாக வாலிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (20). காய்கறி வியாபாரி. இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு வடவள்ளியை சேர்ந்த கோவைப்புதூரில் சூப்பர்மார்க்கெட் நடத்தி வரும் ரமேஷ் (55),அவரது மனைவி மினிஒத்தயத்(50) ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.
இவர்களது கடைக்கு கார்த்திக் காய்கறி சப்ளை செய்து வந்தார். அப்போது ரமேஷ் மற்றும் மினிஒத்தயத், கார்த்திக்கிடம் சூப்பர் மார்க்கெட்டை கவனிக்க சிரமமாக இருப்பதாகவும், உங்களை போன்ற இளைஞர்களிடம் சூப்பர் மார்க்கெட்டை ஒப்படைக்க நினைப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், அவர்கள் கார்த்திக்கிடம் பணம் கொடுத்தால் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பங்குதாரராக சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதனை நம்பி கார்த்திக் பல்வேறு தவணைகளாக ரூ.36 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் வெகு நாட்களாகியும் அவர்கள், கார்த்திக்கை பங்குதாரராக சேர்க்காமல் இருந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கேட்ட போது அவர்கள், பங்குதாரராக சேர்க்க முடியாது எனவும்,கடை அருகே வரக்கூடாது என்றும், பணத்தை தரமறுத்து கார்த்திக்கை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
அப்போது தான் கார்த்திக்குக்கு, ரமேஷ் மற்றும் அவரது மனைவி மினி ஒத்தயத் இதேபோன்று சிலரிடம் சூப்பர் மார்க்கெட்டில் பங்குதாரராக சேர்ப்பதாக பண மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சூப்பர் மார்க்கெட் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி மோசடி செய்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மினி ஒத்தயத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

