கோவை: உடல் நலக்குறைவு காரணமாக வடக்குத் தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன், கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, அவரை கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அறிமுகம் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அனைவரும் தாமரைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய அண்ணாமலை, அன்றைய தினம் கலந்து கொள்ளாததால் அது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், வானதி சீனிவாசன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று கோவை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சாய்பாபா காலனி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வானதி, அதனைத் தொடர்ந்து இரவு அப்பகுதியில் வாகனப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
பின்னர் இன்று காலைவும் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இதனிடையே அவருக்கு திடீரென கால்வலி ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால், தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்ற வானதி சீனிவாசனை, மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அண்ணாமலை வரவிருந்த நேரத்தில் வானதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Service panrathuku munalye vali ya