கோவை: கோவையில் சாப்பிட செல்வதுபோல் நடித்து ஓட்டலில் பணம் திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சாயிபாபா காலனி கேகே புதூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(40). இவர் காந்திபுரம் நேரு வீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று நள்ளிரவில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஜெயச்சந்திரன் ஓட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என கேட்டனர்.
இதனையடுத்து ஜெயச்சந்திரன், இருவருக்கும் சாப்பிட டிபன் வழங்கிவிட்டு வெளியே சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்தார். அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென எழுந்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை நைசாக திருடினார்.
பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். ஜெயச்சந்திரன் அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், பணம் திருடியது செல்வபுரம் நாராயணசாமி நகரை சேர்ந்த கண்மணி(21), அவரது அண்ணன் பொன்மணி(24) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

