கோவை: மதுபோதையில் பிக்கப் வாகனம் ஓட்டி ரயில்வே கேட்டில் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை, போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இன்று மாலை வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அதிவேகமாக வந்த அந்த வாகனத்தை நிறுத்தச் சைகை காட்டினர். ஆனால், ஓட்டுநர் சிக்னலை மதிக்காமல் மின்னல் வேகத்தில் தாறுமாறாக ஓட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் துரத்தி வருவதை அறிந்த அந்த போதை ஓட்டுநர், பிடிபடாமல் இருக்கச் சாலையில் சென்ற பிற வாகனங்கள் மீது மோதுவது போன்ற அபாயகரமான முறையில் ‘ரேஷ் டிரைவிங்’ (Rash Driving) செய்துள்ளார்.
மேட்டூர் பகுதிக்குள் புகுந்து தப்பிக்க முயன்ற போது, அம்மன்புதூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மற்றும் கான்கிரீட் தடுப்புகளில் அந்த பிக்கப் வாகனம் மிகப் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் தாக்கத்தில் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.
சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், வாகனத்தில் இருந்து தப்பியோட முயன்ற அந்த போதை நபரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவரிடம் பொதுமக்கள் எந்த ஊர் எனக் கேள்வி எழுப்பிய போது, “அதுதான் காவல்துறை வந்துவிட்டார்களே” எனத் திமிராக பதிலளித்துள்ளார். மது போதையின் உச்சத்தில் இருந்த அந்த நபரின் இந்த நடத்தை அங்கு இருந்தவர்களை கொந்தளிக்கச் செய்தது.
பின்னால் துரத்தி வந்த போலீஸாரிடம் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
ரயில்வே கேட் சேதமடைந்ததால், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டனர்.
போத்தனூர் போலீஸார் அந்த போதை ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் தாறுமாறாக ஓடிய பிக்கப் வாகனத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


