கோவை: பிரச்சார வாகனத்தில் ஏறியதும், பொசுக்குன்னு பேச்சை முடித்த டெல்லி முதல்வரால் கோவை பாஜக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று கோவை வந்தார்.
தொடர்ந்து அவர், வெங்கிடாபுரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருக்கு முன்பாக 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் பேரணியாகச் சென்றனர்.
டெல்லி முதல்வர் பிரச்சாரத்தின் போது உரையாற்றுவார் என்றும், அவரை உரையைக் கேட்கலாம் என்றும் பாஜக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால், பிரச்சார வாகனத்தில் ஏறிய ரேகா குப்தா, “அனைவரும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று மட்டும் பேசிவிட்டு தனது உரையை முடித்தார்.
அதன் பிறகு வாகனத்தின் மீது நின்று கை அசைத்தவாறே அவர் பேரணியாகச் சென்றார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியில் பேசிய ரேகா குப்தா,
“தற்போது தமிழகம் வளர்ச்சியில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான இந்திய அரசு ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் இந்த வளர்ச்சியை விரும்புகிறார்கள். மாநிலம் முழுவதும் ஒரு பெரிய மாற்றம் தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி உறுதி. வானதி நலமுடன் உள்ளார். விரைவில் அவர் உங்களுடன் பணியாற்றுவார். வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் ஆதரவை வழங்குவார்கள். வானதி சீனிவாசன் ஒரு சிறந்த வேட்பாளர். அவர் மீது மக்கள் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். அவர் நிச்சயமாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.


