கோவை: சிங்காநல்லூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.10,000 காசோலை கூப்பன் விநியோகம் செய்ததாக கூறப்படும் அ.தி.மு.க.வினரை கையும் களவுமாக பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராமனுக்கு ஆதரவாக அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அங்குள்ள கல்லூரி நகர் குடியிருப்பு பகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு ரூ.10,000 காசோலை கூப்பன் விநியோகம் செய்வதாக தவெக. நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த தவெக. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு அ.தி.மு.க.வினர் வாக்காளர்களிடம் சில ஆவணங்களை வழங்குவதைக் கண்ட தவெக.வினர், அவர்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது, வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த ரூ.10,000 காசோலை கூப்பன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் இரு கட்சியினரிடையே அந்த இடத்திலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம், தவெக.வினர் தாங்கள் கைப்பற்றிய காசோலை கூப்பன் ஆதாரங்களை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் தவெக.வினர், “தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.க.வினர் பண பலத்தை பயன்படுத்தி தேர்தலைச் சந்திக்க முயல்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தனர்.
அ.தி.மு.க.வின் இந்த நடவடிக்கைக்கு மற்ற அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் தற்போது அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


