கோவை: கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சொக்கம்புதூர் ஐயப்பனார் வீதி பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (65). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு அசோக் குமார் (35) மற்றும் சதீஷ் (30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அசோக் குமார் மற்றும் சதீஷ் இருவரும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டனர்.
இதனை பார்த்த பாலன், இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அசோக் குமார், தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
இதில் அடங்காமல், வீட்டில் இருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்த அசோக் குமார், பாலனை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பாலன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அசோக் குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


