கோவை: வால்பாறை விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடு குறித்து நோயாளிகள் வெளியிட்ட ஆடியோ பரபரப்பு.
போதிய மருத்துவ கவனிப்பு இல்லாததால் 19 வயது இளைஞர் நவ்சாத் உயிரிழந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 17ஆம் தேதி வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் நவ்சாத் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு சரியான சிகிச்சை அளிக்க ஆள் இல்லாததே காரணம் என அவருடன் சிகிச்சை பெறுபவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“ஆக்ஸிஜன் அளவு குறைந்தபோதும் அதை கவனிக்க மருத்துவர்களோ, செவிலியர்களோ அருகில் இல்லை; இதனால் நவ்சாத் பரிதாபமாக உயிரிழந்தார்” என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்ட ஆடியோவில், மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்களும் செவிலியர்களும் பணியில் இல்லை என்றும், செவிலியர்கள் செய்ய வேண்டிய பணிகளை தூய்மைப் பணியாளர்களே செய்யும் நிலை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“நாங்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். எங்களை எங்கள் ஊர் மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ மாற்ற அனுமதிக்கவில்லை. அதே சமயம் இங்கும் சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை” என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்தில் தப்பியவர்கள் தங்கள் கண்முன்னே உறவினர்கள் பலியான அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், தற்போது மருத்துவமனையின் அலட்சியத்தால் எஞ்சியிருக்கும் தங்களின் உயிரும் ஆபத்தில் உள்ளதோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே நவ்சாத் உயிரிழந்த நிலையில், எஞ்சியிருக்கும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனை, பணியாளர் பற்றாக்குறையால் ஒரு இளைஞரின் உயிரை இழக்கச் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான நோயாளிகள் வெளியிட்ட பகீர் ஆடியோ வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.


