கோவை: கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி நிறுவனங்களின் ஒரு அங்கமான பி.எஸ்.ஜி இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் (PSG College of Allied Health Sciences) 4-வது பட்டமளிப்பு விழா, பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழாவையொட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மொத்தம் 80 பி.எஸ்.சி. தொழில்நுட்பப் பட்டதாரிகளும், 1 எம்.எஸ்.சி. தொழில்நுட்பப் பட்டதாரியும் தங்களது பட்டங்களைப் பெற்றனர். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவிற்குத் தலைமை தாங்கிய டி.எம்.சுப்பாராவ் அவர்கள் பேசுகையில், 1985-ஆம் ஆண்டு வெறும் 3 முதுநிலைப் பட்டப்படிப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று 10 சிறப்புப் பட்டப்படிப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக வளர்ந்திருப்பதை எடுத்துரைத்தார். இம்மாணவர்களின் வாழ்வில் இது ஒரு “பொன்னான நாள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் இந்திய அசோசியேஷன் ஆஃப் பிசிஷியன் அசோசியேட்ஸ் முன்னாள் தலைவர் கோமதி சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்திய அரசால் தேசிய சுகாதாரத் தொழில்முறை ஆணையம் (National Commission for Allied and Healthcare Professions) அமைக்கப்பட்டிருப்பது, மருத்துவத் துறையில் இணை மருத்துவப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என்று அவர் பாராட்டிப் பேசினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் மற்றும் தலைவர் ஜி.ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் பட்டம் பெற்ற மாணவர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


