கோவை: கோவை ஜிசிடி கல்லூரியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன
கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக காலை 11 மணி அளவிலேயே ஒரு தொகுதியில் எந்த வேட்பாளர் வெல்வார் என்பது கணிக்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் மாலை வரை கூட முடிவுகளை கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவேக தலைவர் விஜயின் வருகையும் இந்த மாற்றத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது மேலும் சமூக வலைதளங்களின் தாக்கமும் இந்த தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த முக்கிய நகரமாக இருக்கும் கோவையில் தேர்தல் முடிவுகளை அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு கவுண்டம்பாளையம் மேட்டுப்பாளையம் கோவை வடக்கு கோவை தெற்கு சிங்காநல்லூர் சூலூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி வால்பாறை மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி உற்சாகமாக நடைபெற்ற நிலையில் இன்று மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் வருகைக்கான ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.
மேலும் துணை ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் முகவர்களுக்கு காப்பு அணியக்கூடாது வாகன சாவி எடுத்துச் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன ஒழுங்குமுறையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



