கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தாஹா நசீர், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 472 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில், வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் தாக்குதல் திட்டத்தின் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்ட ஜமேஷா முபின் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை ஆரம்ப கட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக், முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன், மற்றொரு முகமது அசாருதீன் மற்றும் தாஹா நசீர் உள்ளிட்ட மேலும் 8 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், தற்போது வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தாஹா நசீர் 472 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
தவறான பாதையில் செல்லாமல் இருந்திருந்தால் நல்ல எதிர்காலத்தை நசீர் பெற்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


