கோவை: ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலியால் ஜவுளித்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ள நிலையில், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோவை ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் கெர்சி பருத்தி ஆலோசனை கமிட்டி, இந்திய பருத்தி விளைச்சல், விலை மற்றும் வியாபார கொள்கைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ஜவுளித்துறையை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைக் கழகத்தில் நடைபெற்றது.
அப்போது இந்திய ஜவுளித்துறை சம்மேளனத்தின் தலைவர் அஸ்வின் சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பருத்தி உற்பத்தி குறைவாக இருப்பதால், சுமார் 36 லட்சம் பருத்தி பேல்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் இந்திய ஜவுளித்துறை வெளிநாடுகளைச் சார்ந்து இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு கேண்டி பருத்தி விலை ரூ.67 ஆயிரமாக உள்ளது. இதனுடன் 11 சதவீத இறக்குமதி வரியும் சேர்க்கப்படுவதால் தொழில் முனைவோருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
எனவே பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும். இந்தியாவில் உற்பத்தி குறைவாக இருப்பதால், இந்த வரியை நீக்குவதால் விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக ஏற்கனவே ஜவுளித்துறைக்கான மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றம், கேஸ் தட்டுப்பாடு, எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்கள் விலை உயர்வு, டை மற்றும் கெமிக்கல் விலை 20 சதவீதம் அதிகரிப்பு, பேக்கேஜிங் மற்றும் பொருட்களை அனுப்பும் செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஜவுளித்துறை சிக்கித் தவிக்கிறது.
எனவே மத்திய அரசு உடனடியாக பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் ஜவுளித்துறையில் புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.


