கோவை : கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வாலிபரின் உடலை தூக்கிச் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூரைச் சேர்ந்த மகேஸ்வரன் (24) கடந்த 7ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி மகேஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு திரண்டனர். அப்போது மகேஸ்வரனின் உடலில் ரத்தக்கறைகள் இருப்பதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் பிணவறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடித்து உடைத்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த போலீசார், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டர்களுடன் ரகளையிலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மருத்துவமனை பணிகளை செய்யவிடாமல் தடுத்த அந்த கும்பல், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மகேஸ்வரனின் உடலை அங்கிருந்து தூக்கிச் சென்றது. பின்னர் சாலையில் சடலத்துடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூர் மற்றும் சூலூர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவமனை ஆர்எம்ஓ மணிகண்டன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மகேஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான மயாண்டி, மற்றொரு மயாண்டி, அரவிந்த், சிவன்குமார், கேசவகுமார், சேகர், அங்குநாதன், குருநாதன் மற்றும் மாதவி உள்ளிட்ட 9 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், மருத்துவமனை சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மகேஸ்வரனின் மாமனாரான சூலூர் தேவர் வீதியைச் சேர்ந்த பாண்டி (48) என்பவரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். பின்னர் மகேஸ்வரனின் உடலை பெற்றுக்கொள்வதாக கூறி பிணவறை அருகே காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகனின் உடலை வாங்க காத்திருந்த மாமனார் திடீரென உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


