கோவை: பேருந்து நிறுத்தம் வார சந்தை நடைபெறும் இடத்திற்கு அருகில் மதுபான கடை திறக்கப்படுவதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் புதிதாக தனியார் மதுபான கடை திறக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த தொகுதியின் புதிய எம்எல்ஏவாக தமிழக வெற்றிக் கழகத்தின் விக்னேஷ் பொறுப்பேற்கும் முதல் நாளே பொதுமக்கள் மதுபான கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் 11 to 11 தனியார் மதுபான கடை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் மற்றும் வார சந்தை நடைபெறுவதாகவும் அதே பகுதியில் தற்பொழுது அந்த மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த பொதுமக்கள் அவ்வாறு மதுபான கடை திறக்கப்படும் பட்சத்தில் ஒரு பொது மக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படும் என்றும் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும் என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே அந்தப் பணிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது வரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்றும் ஆனால் தற்பொழுது மதுபான கடையை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். எனவே அரசு அதிகாரிகள் இதில் தலையிட்டு மதுபான கடை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏவாக இன்று தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் விக்னேஷ் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் நாளே அப்பகுதி மக்கள் மதுபான கடை அமைய உள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் மேற்கொண்டுள்ளது அப்பகுதியில் பேசு பொருளாகி உள்ளது. தவெக எம்.எல்.ஏ விக்னேஷ் போதை இல்லாத தொகுதியாக இந்த தொகுதியை மாற்றுவேன் என்று பிரச்சாரத்தின் பொழுது தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


