கோவை: கோடை மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 7 அடி உயர்ந்து, கோவை மற்றும் திருப்பூருக்கு குடிநீர் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதிகளை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கொண்ட இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும்.
கடந்த சில வாரங்களாக கடும் கோடை வெயிலும், மழையின்மையும் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
Read news :LPG சிலிண்டர் டெலிவரியில் புதிய கட்டுப்பாடுகள்… இது இல்லையெனில் சிலிண்டர் இல்லை!
இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, கடந்த 3ஆம் தேதி 77 அடியாக இருந்த பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 84 அடியாக உயர்ந்துள்ளது.
ஒரே வாரத்தில் 7 அடி உயர்ந்திருப்பது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அணைக்கு விநாடிக்கு 1200 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read news : மதிப்பெண் குறைவால் பிளஸ்-2 மாணவி விபரீத முடிவு
மேலும், பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்தால் பாதுகாப்பு கருதி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை பெருமளவில் தவிர்க்க முடியும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



