கோவை: பிளஸ்-2 பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மனவேதனையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி தங்கம்மாள் நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகள் யாழினி (17). இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதியிருந்தார்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
தான் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்காததால், கடந்த சில நாட்களாக யாழினி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது தாய் நர்மதாவிடமும் அவர் வருத்தத்துடன் பேசியுள்ளார். குடும்பத்தினரும் மாணவிக்கு ஆறுதல் கூறி தேற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனவேதனையில் இருந்த யாழினி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர், யாழினி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


