மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோக முறையிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான பதற்றம் காரணமாக முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் உலக நாடுகளின் எரிபொருள் விநியோகத்திலும் பிரதிபலித்து வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை கட்டுப்படுத்தவும், கள்ளச்சந்தை மற்றும் தேவையற்ற சேமிப்பை தடுக்கவும் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் புதிய டிஜிட்டல் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளன.
OTP கட்டாயம்
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் தற்போது Delivery Authentication Code (DAC) எனப்படும் OTP அடிப்படையிலான டெலிவரி முறையை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
இந்த முறையின் கீழ், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் போது அந்த OTP-ஐ தெரிவித்தால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும்.
முன்னதாக பெரிய நகரங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்த இந்த முறை, தற்போது சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
95% டெலிவரி OTP மூலம்
மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக தகவலின்படி, தற்போது நாடு முழுவதும் நடைபெறும் LPG டெலிவரிகளில் சுமார் 95 சதவீதம் DAC முறையிலேயே வழங்கப்படுகிறது. வெறும் 5 சதவீத டெலிவரிகள் மட்டுமே OTP இல்லாமல் நடைபெறுகின்றன.
இதனால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் இல்லாதவர்கள், பழைய எண்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் OTP பெற முடியாதவர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
ரீஃபில் முன்பதிவிலும் மாற்றம்
முன்னதாக அனைத்து வாடிக்கையாளர்களும் 21 நாட்களுக்கு பிறகு புதிய சிலிண்டரை முன்பதிவு செய்ய முடிந்தது. ஆனால் தற்போது புதிய விதிமுறைகளின்படி அந்த கால இடைவெளி உயர்த்தப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு பிறகே புதிய சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும். கிராமப்புறங்களில் இந்த இடைவெளி 45 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு அதிக பாதிப்பு?
புதிய OTP நடைமுறை மற்றும் கால இடைவெளி விதிமுறைகள் குறிப்பாக முதியவர்கள், ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
பல குடும்பங்களில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பழையதாக இருப்பது அல்லது வேறு குடும்ப உறுப்பினரின் எண்ணில் இணைக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் OTP பெறுவதில் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
மேலும் கிராமப்புறங்களில் இணைய வசதி மற்றும் டிஜிட்டல் பயன்பாடு குறைவாக இருப்பதால், இந்த புதிய நடைமுறைகள் கூடுதல் சவாலாக மாறக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் சேமிப்பு நடவடிக்கை?
இதேவேளையில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் LPG விநியோகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள், இந்தியா படிப்படியாக “Fuel Conservation Mode” எனப்படும் எரிபொருள் சேமிப்பு நிர்வாக முறைக்குள் நகர்ந்து வருகிறதா என்ற விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.


