கோவை: கோவையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி, கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மற்றும் அவனது நண்பர்கள் 4 பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையில் கல்லூரியில் படித்து வந்தபோது, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற வாலிபருடன் பழகியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கார்த்திக்குடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். ஆனால், காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திக், தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் கேடிஎம் (KTM) மற்றும் பல்சர் (Pulsar) ஆகிய இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்/பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது வீசினர். இதில் ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் அங்கு இருந்த கேன்வாஸ் ஷூக்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வீடியோ காட்சிகள்
இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் துறையினர் கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி ரவுடிகள் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம், தொண்டாமுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



