கோவை:கோவையில் லாரியில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 பேரை கைது செய்துள்ளனர்.
கோவை சுங்கம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரியில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை தீவிரமாக சோதனை செய்தனர்.
அதில், லாரியில் 10 கிலோ கஞ்சா மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28), அருண்குமார் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்றும், அவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.



