கோவை: கோவையில் இளம் பெண் வீட்டின் மீது சென்னையைச் சேர்ந்த ரவுடி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர் பிரேக் அப் செய்ததால் ஆத்திரம் அடைந்த சென்னை ரவுடி ஒருவன், தனது கூட்டாளிகளுடன் வந்து காதலியின் வீட்டின் மீது பெட்ரோல் மற்றும் எரியும் எண்ணெய் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை வீசி ‘குண்டு வைப்பு’ பாணியில் தாக்குதல் நடத்திய சம்பவம் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த கள்ளிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு, அவரது தோழி மூலம் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் நாளடைவில் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) சமூக வலைதளம் வழியாக தீவிரக் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் அந்த நபரின் பின்னணி குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, காதலன் கார்த்தி சாதாரண நபர் இல்லை என்பதும், கடந்த 2024ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பயங்கர குற்ற வழக்குகளில் சிக்கி, குண்டாஸ் (Goondas Act) சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்த ‘ரவுடி’ என்பதும் தெரியவந்தது.
காதலனின் இந்த குற்றப் பின்னணியை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்களது மகளின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட அந்த இளம்பெண்ணும், ரவுடி கார்த்தியுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து ‘பிரேக் அப்’ செய்துள்ளார்.
வெடித்த குண்டு

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கார்த்தி, தனது கூட்டாளிகளுடன் இருசக்கர வாகனங்களில் கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொண்டு வந்த எரியக்கூடிய ஆயில் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை பற்றவைத்து, இளம்பெண்ணின் வீட்டின் நுழைவாயிலை நோக்கி வீசி ‘பெட்ரோல் குண்டு’ தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த காலணி வைக்கும் ஸ்டாண்ட் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித உடல் காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து, மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.
வீடியோ காட்சிகள்
இன்ஸ்டாகிராம் காதலால் அரங்கேறிய இந்த ‘பீர் பாட்டில் குண்டு’ விவகாரம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய சென்னை ரவுடி கார்த்தி மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்பின் அறிமுகமில்லாத நபர்களை நம்பி பல இளைஞர்கள் வாழ்க்கையை இழந்து வரும் நிலையில், பெற்றோர்கள், இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.



