கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தில் போலீசார் 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனிடைய ஆட்சியில் அலுவலகம் அருகே உள்ள சாலையோர இட்லி கடையில் மக்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது சில இளைஞர்கள் மது போதையில் அங்கு சாப்பிட வந்துள்ளனர்.
அவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மோதலாக மாறியது.
இந்த மோதலில் விஷ்வேஷ் என்ற இளைஞர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்திற்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியனர். தகவல் அறிந்த போலீசார் கோவை ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறு ஏற்பட்ட காரணம் மற்றும் இதில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இப்படியான சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



