கோவை: சூலூர் சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதில் கார்த்திக் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முயன்ற பொழுது கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோகன்ராஜிற்கு மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்நிலையில் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி பரிந்துரை செய்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று ஆஜர்படுத்தபட்ட மோகன்ராஜ்க்கு ஜூன் 5ம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.



