கோவை: சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக கோவையில் பணியாற்றி வருகிறார்.
சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 69வது வார்டில், வழக்கம்போல் சக்திவேலும் அவரது நண்பர் மணிகண்டனும் பணிக்குச் சென்று குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வந்தனர். அப்போது, மூதாட்டி ஒருவர் குப்பைகளை ஒரு பையில் கொண்டு வந்து சக்திவேலிடம் கொடுத்தார்.
அந்தப் பையை பெற்றுக்கொண்டு தரம் பிரிக்க முற்பட்டபோது, அதிலிருந்த மற்றொரு பையில் தங்கச் சங்கிலி இருப்பதை சக்திவேல் கவனித்தார். உடனடியாக அந்த மூதாட்டியை அழைத்து, தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
மூன்றரை சவரன் மதிப்புள்ள அந்த தங்கச் சங்கிலி, சுப காரியத்திற்காக வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தூய்மை பணியாளர் சக்திவேல் அந்த நகையை உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்தபோது, அவர்கள் மிகுந்த நன்றியுணர்வுடன் அதை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி வெங்கடேஷ், ஒப்பந்த பணியாளர் சக்திவேலை பாராட்டி, சால்வை அணிவித்து மரியாதை செய்ததுடன், ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தார்.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், தூய்மை பணியாளர் சக்திவேலை அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், “நான் செய்யும் வேலைக்கு நிறுவனம் ஊதியம் வழங்குகிறது. அடுத்தவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படக் கூடாது,” என்றார்.
மேலும், பணியாற்றி வரும் நிறுவனத்தினரும், மாநகராட்சி அதிகாரிகளும் தனது நேர்மையை பாராட்டியது தனக்கு மனநிறைவை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


