கோவை: கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி கோவை–திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கூலி உயர்வு ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த 2022-ஆம் ஆண்டு மாநில அரசின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களுக்கு இடையே கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது சில ஜவுளி உற்பத்தியாளர்கள் அந்த ஒப்பந்தத்தை மீறி, நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான கூலி வழங்கி வருவதாக குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகி பூபதி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சனை நீடித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்கும் கூலி உயர்வு ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு 42 நாட்கள் தொடர் போராட்டம் மற்றும் 8 நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற பிறகே புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும், அதன்பிறகும் சில ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறித் தொழில் மேலும் சீர்குலையும் அபாயம் உள்ளதாகவும், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மேலும், பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மீண்டும் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த வாரம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


