கோவை: பைனான்ஸ் தொழில் செய்த டிரைவரை எரித்துக் கொலை செய்த நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ். புரம், பட்டு நூல்கார சந்து பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன் அபுதாகிர் பாஷா (27). இவர் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அத்துடன் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 29 ம் தேதி மாலை அபுதாகிர் பாஷா வழக்கம்போல வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். அதன் பின்னர் இரவு 8 மணி அளவில் அவர் தனது வீட்டின் அருகிலேயே நின்று கொண்டு இருந்ததை அவருடைய தாய் பாத்திமா (45) பார்த்து உள்ளார்.
வழக்கமாக அபுதாகிர் பாஷா இரவு 11 மணிக்குள் வீட்டிற்குத் திரும்பி விடுவது வழக்கம் என்பதால், அன்றைய தினமும் நள்ளிரவு வரை அவரது குடும்பத்தினர் காத்து இருந்தனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், அவரது செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேச முயன்றனர்.
அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பாத்திமா, தனது மகனைப் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான அபுதாகிர் பாஷாவைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அப்போது சிரியன் சர்ச் ரோடு பகுதியில் சாக்கடையில் ஆண் பிணம் ஒன்று எரிந்து நிலையில் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அது மாயமான அபுதாஹிர் பாஷா என்பது தெரிவந்தது. மேலும் அவரது வயிற்றில் கத்தி கருத்து காயம் இருந்து உள்ளது. இதை அடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் மாயம் வழக்கை கொலை வழக்காக மாற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


