கோவை: ரீல்ஸ் ஆட்சி இன்னும் ரியல் ஆட்சியை துவக்கவில்லை என தவெக அரசை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றிகளை தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் வாக்காளர்கள் மத்தியில் பேசிய செந்தில் பாலாஜி, வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், என்ற பல்வேறு திட்டங்களை வழங்கியதை குறிபிட்டார். தன்னுடைய நன்றியை வெறும் வார்த்தையாக இல்லாமல் தெற்கு தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து சேர்பபதில் முதக் ஆளாக இருப்பேன் என்று உறுதி அளிப்பதாக தெரிவித்தார்.
நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மனமில்லாத அரசாக இருப்பதாகவும் தேர்தல் வாக்குறுதியில் இந்த அரசு கொடுத்ததையும் தற்பொழுது நடைபெற்று வருவதையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தை பொருத்தவரை 300 கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் அறிவுலகம், ஜிடி நாயுடு மேம்பாலம் செம்மொழிப் பூங்கா மேற்கு புறவழிச் சாலை என்று பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கியதாகவும் கோவை மக்கள் வரக்கூடிய காலங்களில் தங்களுக்கு ஆதரவை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் நாளையுடன் இந்த நிகழ்வு நிறைவு பெறுகிறது என்று தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தினர் திமுக பற்றி தொடர்ந்து விமர்சித்து வருவது தொடர்பான கேள்விக்கு திரையிலும் திரை உலகத்திலும் திரைப்படத்திலும் வசனங்கள் பேசலாம் ஆனால் அரசு பொறுப்பு ஏற்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்ன அவசர தேவைகள் இருக்கிறதோ அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும் அதுதான் முதல்வரின் கடமை என்று பதில் அளித்தார். எங்களுடைய முதல்வர் கொரோனா காலத்தில் வெற்றி பெற்று அரசு பொறுப்பு ஏற்பதற்கு முன்பே அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
தற்பொழுது பொறுப்பேற்றுள்ள அரசு திமுகவை விமர்சிப்பதை மட்டுமே குறியாக கொண்டிருப்பதாகவும் மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை துறையின் அமைச்சர்களும் துறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்று செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர் உட்பட அனைவரும் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பதில் குறியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்கள் தற்பொழுதும் மக்கள் மனதில் வைத்துள்ளார்கள் என்றும் எங்களுடைய தலைவருக்கு மக்கள் ஆதரவை அளிப்பதற்கும் தயாராக உள்ளார்கள் என்று தெரிவித்தார். தற்போதைய அரசு அதன் பணிகளை மறந்து வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறது என்றும் விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளதையும் சுட்டி காட்டினார்.
இந்த அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் அரசு தவறு செய்கின்ற பொழுது அதனை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டத்திற்கு தற்போது இரண்டு அமைச்சர்கள் இருப்பது தொடர்பான கேள்விக்கு முதலில் அவர்கள் என்ன திட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்ன கொள்கைகளில் உள்ளார்கள் என்று பார்க்க வேண்டும், மாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றி வெற்று கவர்ச்சியில் மக்களிடம் ஓட்டுகளை வாங்கியுள்ளார்கள் என்றும் மாற்றம் என்றால் என்னவென்று முதலில் அவர்கள் கூற வேண்டும் என்று தெரிவித்தார். கல்வி மருத்துவம் தொழில் துறை ஆகியவற்றில் மாற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள் கல்வி மற்றும் மருத்துவத்தில் தமிழ்நாடு ஏற்கனவே முதலிடத்தில் தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மகளிர் பாதுகாப்பு படையை அமைப்பேன் என்று முதல்வர் கூறிய நிலையில் மூன்று முறை அதை தள்ளி போட்டு உள்ளார்கள் சூலூர் சம்பவம் அனைவருக்கும் தெரியும் இவ்வாறான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆறு மாத காலம் பொறுத்திருக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினார். எங்கள் கழக தலைவர் ஆட்சியில் மின்வெட்டு இல்லாத ஆட்சியாக இருந்ததாகவும் ஆனால் தற்பொழுது மின்வெட்டு காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இவ்வாறான சூழலில் மின்சாரத்துறை அமைச்சர் உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்களை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் எங்கள் கழகத் தலைவர் துவக்கி வைத்ததை ஏதோ புதிதாக துவக்கியதை போல அறிவிக்கிறார் என்றும் நாங்கள் பொறுப்பேற்கும் பொழுதே மின்சாரத் துறையில் 1.5 லட்சம் கோடி கடன் இருந்தது வருடத்திற்கு 15000 கோடி வட்டி கட்ட வேண்டி இருந்தது என்றும் வசனங்களையும் கருத்துக்களையும் பேசுவதை விட்டுவிட்டு துறையையும் அரசையும் நல்ல முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். போதைப் பொருட்கள் என்னென்ன மாநிலங்கள் வழியாக வந்தது அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று எங்களுடைய முதல்வர் விளக்கம் அளித்திருந்தார் ஆனால் தற்பொழுது உள்ள அரசு என்னென்ன முயற்சிகளை முன்னெடுத்துள்ளது என்பதை கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
(தவெக) எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார்கள் என்றும் தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் விஷயத்தில் மோசமாக நிகழ்ச்சிகளில் பாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் தற்பொழுது டாஸ்மாக் விவகாரத்தில் எவற்றை கட்டுப்படுத்தி விட்டார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். தேர்தலுக்கு முன்பு வண்டி மீது ஏறி நின்று பொய்யான கருத்துக்களை கூறி அவதூறு பரப்பி பாட்டு எல்லாம் பாடினார்கள் ஆனால் டாஸ்மாக் விவகாரத்தில் தற்பொழுது வரை அந்த துறையின் அமைச்சர் விளக்கத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அப்படி என்றால் அன்று பாடிய பாட்டுக்கு என்ன பதில் என்று கேள்வி எழுப்பினார்.
யோசிக்காமல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள் அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும் என்றும் என்னை பொருத்தவரை தவெக என்பது ரீல்ஸ் ஆட்சி இன்னும் அவர்கள் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளார்கள் அமைச்சர்களும் அரசும் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளது மக்களுக்கான ரியல் ஆட்சியாக இன்னும் அவர்கள் பணிகளை துவக்க வில்லை அவர்கள் பணியை துவக்குவார்கள் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் இல்லை என்று தெரிவித்தார்.
அண்ணாமலை புதிதாக கட்சி துவங்குவதாக தகவல்கள் வெளியாவது தொடர்பான கேள்விக்கு அது போன்ற ஒரு தகவல் எனக்குத் தெரியவில்லை அவர் அவ்வாறு ஆரம்பித்தால் அதை பற்றி பேசலாம் என்று தெரிவித்தார்.
மேலும் தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் மூலம் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார்? எவ்வளவு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட போகிறது? எத்தனை கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார். பல்வேறு அமைச்சர்கள் கூறுவதைப் போலவே ஒரு மாத காலம் காத்திருந்து பார்ப்போம் தொழிலாளர்களின் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்து விடுவார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்தார்.


