கோவை: கோவையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது, அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஹோப் காலேஜ் அருகே தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் நடுவே ஆங்காங்கே ஆழமான அஸ்திவாரக் குழிகள் தோண்டப்பட்டு, இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பல மாதங்களாக ஆமை வேகத்தில் இப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வழியாக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், மேம்பாலக் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த ஆபத்தான பள்ளத்தை கவனிக்காமல் எதிர்பாராத விதமாக சைக்கிளுடன் அந்த ஆழமான குழிக்குள் விழுந்தார்.
குழிக்குள் இரும்புக் கம்பிகள் மற்றும் சிமெண்ட் கட்டைகள் இருந்ததால், அவர் படுகாயமடைந்து உள்ளேயே சிக்கிக் கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடி வந்து குழிக்குள் இறங்கி, படுகாயமடைந்த முதியவரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
வீடியோ காட்சிகள்
மேம்பாலக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர், மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்தச் சாலையில் தோண்டப்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களைச் சுற்றி எவ்வித பாதுகாப்புத் தடுப்புகளையோ, எச்சரிக்கைப் பலகைகளையோ வைக்காமல் அலட்சியமாக செயல்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read: கோவை மக்களே கவனம்; நாளைய மின் தடை பகுதிகள் வெளியீடு!
கோவையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளில் இதுபோன்ற விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு, அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


