கோவை: தமிழகத்தில் சினிமா பிம்பம் உள்ளது என்று பாஜக கூறினால், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் யார்? அவர் சினிமா துறையைச் சேர்ந்தவர்தானே என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது. மழைப்பொழிவும் குறைவாக உள்ளது.
இந்த ஆண்டு மட்டும் அல்ல, 2017-18 ஆண்டுகளிலும் இதே நிலை இருந்தது. 2019-20 ஆண்டுகளிலும் அதே சூழல் நிலவியது. ஆகவே, கூடுதல் தண்ணீர் வந்தால் மட்டுமே தண்ணீரை திறக்க முடியும் என்பது அங்குள்ள பொறியாளர்களின் கருத்தாக உள்ளது. அதை மனதில் வைத்துத்தான் பிரதமருடன் பேசும்போது, நமக்கு தேவையான நீரை குறிப்பிட்ட காலத்தில் வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர், ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். தற்போது அளவீடுகள் மற்றும் கணக்கீடுகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரைப் பொறுத்தவரை, தமிழகத்தையும் டெல்டா விவசாயிகளையும் காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
எல்லோரும் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம். விஜயும் ஆலயத்திற்குச் செல்கிறார். மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் ஆலயத்திற்குச் செல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களது குடும்பத்தினர் செல்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோதும் மின் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மின் தேவை அதிகமாக உள்ளது. மழை குறைவாக இருப்பதால் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.
முன்பு ஒரு வீட்டில் ஒரு ஏசி அறை மட்டுமே இருந்தது. தற்போது இரண்டு அல்லது மூன்று ஏசி அறைகள் உள்ளன. இதனால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், கூடுதல் மின்சாரத்தை கையாளும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மொத்தமாக ரூ.687 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
சென்னையில் 3,500 மெகாவாட் மின்சாரத்தை கையாளும் திறன் இருந்த நிலையில், மக்கள் 5,000 மெகாவாட் வரை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது.
தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கடிதம் மூலம் பிரதமரிடம் வழங்கி வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் தெளிவாக உள்ளார்.
தமிழகத்தின் குரலை சரியான இடத்தில் எடுத்துச் சென்று வலியுறுத்தி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு காலை 11 மணிக்குத்தான் வருவார். வருகைப் பதிவேட்டை பார்த்தால் தெரியும். அவரது துறைக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின்தான் முன்மொழிந்தார். இதுகுறித்து கேட்டால் உடல்நலம் சரியில்லை என்று கூறுகின்றனர்.
என்றார்.
தவெக நிர்வாகி பாலியல் வழக்கில் சிக்கியது குறித்த கேள்விக்கு, எந்த குற்றமாக இருந்தாலும் விசாரித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு கருத்து கூற முடியாது.
இந்த விஷயம் உண்மையாக இருந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தற்போது ‘சிங்கப்பெண் படை’ உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படை விரைந்து செயல்படுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் நடமாட்டம் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இளைஞர்களிடம் போதைப்பொருளை கொண்டு சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தடுக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு.
இடைத்தேர்தலைப் பொறுத்தவரை இன்னும் காலம் உள்ளது. அதற்கு முன்பாக பதில் கூற முடியாது. யாருக்கு சீட் வழங்கப்படும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்.
நேற்றுக்கூட தவெக சார்பில் இடைத்தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். எந்தக் கட்சியாக இருந்தாலும் அரவணைத்து செல்ல வேண்டும். மக்களுக்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே அதுகுறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும். என்றார்
தமிழகத்தில் 70 ஆண்டுகளாக சினிமா துறையின் ஆதிக்கம் உள்ளது என்று பாஜக விமர்சித்துள்ளதே என்ற கேள்விக்கு, தமிழகத்தில் சினிமா பிம்பம் உள்ளது என்று பாஜக கூறினால், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் யார்? அவர் சினிமா துறையைச் சேர்ந்தவர்தானே. அவர் பாஜக கூட்டணியில்தான் துணை முதலமைச்சராக உள்ளார். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்?என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


