கோவை: நாட்டில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நகை வடிவமைப்பாளர்கள் நடத்தும் நகைக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
தென்னிந்தியாவின் முன்னணி நகை கண்காட்சிகளில் ஒன்றான ‘ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026’ கோவையில் இன்று துவங்கியது.
அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில், இக்கண்காட்சி நடைபெற்று வரும் இக்கண்காட்சி ஜூன் 14ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் சென்னை, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முன்னணி நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் பிராண்டுகள் பங்கேற்றுள்ளனர்.
இக்கண்காட்சியில் தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய மற்றும் திருமண நகைகள், ஆன்டிக் வடிவமைப்பு நகைகள், குந்தன், ஜடாவ், போல்கி மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடம்பர ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வராத பல பிரத்யேக வடிவமைப்பு நகைகளும் இக்கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


