கோவை: சிங்காநல்லூரில் ஆட்டோவில் கடத்த முயன்ற 20 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து உணவுப் பொருள் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தாமோதரசாமி லே-அவுட் பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்கிடமாக ரேஷன் அரிசி மூட்டைகள் ஆட்டோவில் ஏற்றப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது, ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதற்காக தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், ஆட்டோவில் இருந்த 20 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி எந்த ரேஷன் கடையில் இருந்து சேகரிக்கப்பட்டது, யார் மூலம் கொண்டு வரப்பட்டது, கேரளாவிற்கு கடத்த திட்டமிடப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் உடனடி தகவலால் ரேஷன் அரிசி கடத்தல் முயற்சி தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


