கோவை: ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ் என்பவர் தனது மகனை பள்ளி ஆசிரியர் தாக்கியதில் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து மாணிக்கராஜ் கூறுகையில், தனது மகன் பிரதீப்(16) நேஷனல் மாடல் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதாகவும்
பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவரது ஆசிரியர் அவனை தாக்கியதாகவும் இதனை பெற்றோரிடம் கூறிவிடக்கூடாது என்று மிரட்டியதால் அதனால் தங்களது மகன் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதல் தேர்விலேயே பள்ளியிலிருந்து தன்னை தொடர்பு கொண்டு உங்களது மகன் உடல்நிலை சரி இல்லாமல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக வந்து மாற்று சீருடை அணிந்து பொது தேர்வை எழுத அழைத்துச் செல்லுமாறு கூறியதாகவும் அதனை தொடர்ந்து என்னுடைய மனைவி அங்கு சென்று பார்த்த பொழுது மகன் மயக்க நிலையில் இருந்ததாக தெரிவித்தார்.
பின்னர் தங்களுக்கு தெரிந்த மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் காய்ச்சல் மற்றும் இரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததாகவும் அதனை தொடர்ந்து தனது மகனிடம் விசாரிக்கும் பொழுது பள்ளியில் ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டதாகவும் அவர்களே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து மீண்டும் விடுதிக்கு கொண்டு வந்ததாகவும் இதனை பெற்றவரிடம் கூறக்கூடாது என்று மிரட்டியதாக மகன் தெரிவித்ததாக கூறினார்.
ஆசிரியர் தாக்கியதில் தனது மகனின் காலில் பலத்த காயமே ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்திருப்பதாகவும் இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் பள்ளிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார் இது குறித்த மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக பொது தேர்வு எழுத முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டார்.


