கோவை: சூலூர் அருகே பேக்கரியை உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில், பைபாஸ் சாலையில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பேக்கரியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் கல்லாப்பெட்டியையும் உடைத்து அதில் இருந்த 7,000 ரொக்கப் பணம் மற்றும் கடையிலிருந்த 10,000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடி சென்றுள்ளார். மறுநாள் காலை கடை திறக்க வந்தபோதுதான் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
அதேபோல பைபாஸ் சாலையில் உள்ள மற்றொரு பெட்டிக்கடை ஒன்றிலும் 8000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் மர்ம நபர் கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை எடுப்பதும், சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்வதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


