கோவை: கோவையில் நீட் (NEET) தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. இவர் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் அனு கீர்த்தனா (19). இவர் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற இலக்குடன் நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், மீண்டும் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தேர்வு தொடர்பான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த தலைவலி தைலத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வரும் நிலையில், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோவை மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


