கோவை: பொள்ளாச்சி அருகே யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அருந்தும் தண்ணீரையே பழங்குடியின மக்கள் வடிகட்டி குடிக்கும் அவல நிலை – தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பழங்குடியின மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 19 பழங்குடியின மலைவாழ் மக்கள் கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்களது முன்னோர் காலத்திலிருந்து தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பழங்குடியின கிராம மக்களுக்கு வீடுகள், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஒரு சில மலைக் கிராமங்களுக்கு தற்போது சில அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள எருமைபாறை பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இவர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லாததால் யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் நடமாடும் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பின்றி நடந்து சென்று, அங்கு சிறிய குட்டைகளில் தேங்கி நிற்கும் வனவிலங்குகள் அருந்தும் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அந்த தண்ணீரை வனவிலங்குகள் அருந்தும் போது அவை உள்ளே இறங்கி அசுத்தம் செய்வதால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் துணிகளால் வடிகட்டி எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
Also Read: குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…
மேலும், இந்த அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் போது பாதுகாப்பின்றி யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்க வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வீடியோ
பலமுறை அரசுத்துறை அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தற்போது தங்கள் மலைக் கிராமங்களை ஆய்வு செய்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பழங்குடியின மக்கள் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


